Friday, 8 March 2024

மகளிர் தினக்கவிதை

 பெண்ணே நீ


அடுப்படியில் வேலை அனைத்தும் செய்வாய்

அலுவலகத்திலும் உயர் பதவி வகுத்திடுவாய்



அழகழகாய் வாசலில் கோலம் போடுவாய்

அண்ட வான் வெளியிலும் பறந்திடுவாய்


அரிசி உலையை வீட்டில் பார்ப்பாய்

அணு உலையையும் ஆராய்ச்சி பண்ணிடுவாய்


ஆக்கமாக குடும்பத்தில் சந்ததி பெருக்குவாய்

ஆசிரியராக பள்ளியில் அறிவையும் வளர்த்திடிவாய்


அன்னையாக அரவணைத்துப் பேணுவாய்

ஆட்சியராக ஆளுமையும் செய்துடுவாய்


ஆலமர விழுதுகளாக இல்லத்தைத் தாங்குவாய்

ஆளுநராக அரசியலிலும் சாதனை படைத்திடுவாய்


அன்பை அருவியாகப் பொழிவாய்

ஆவேசமும் தக்க நேரம் அனலாய் கொட்டிடுவாய்


அடுக்கடுக்காய் எத்தனை வேலை இருந்தாலும்

அசராமல் எல்லாம் செய்து முடிப்பாய்


அஷ்டாவதானியாய் உன் ஆற்றல்கள் அபாரம்


அனைத்து உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீ

அத்தனை மகிழ்ச்சித் தருணங்களிலும் நீ-  நீ இன்றி


ஆக்கம், ஊக்கம், பிறவி என்று

அகில உலகிலும்அண்ட சராசரத்திலும்

எதுவுமே இல்லை- 

நீ இன்றிஅமையாது இன்ப இல்லமும் அதைத் தாங்கும் உலகமும்- 

நீ ஆரோக்கியம் பேணி உடல் நலம் காத்து பூவுலகில் 


அமைதி என்றும் நிலவச் செய்து மென்மேலும் சாதனை செய்து 


,ஆனந்த வாழ்வு கொண்டு,  வாழ்க, வளர்க  பெண்ணே நீ!


ரமா & முத்துக்குமார்