Friday 23 November 2018

புயல் நிவாரண நிதி -மாநிலச்சங்க வேண்டுகோள்

தமிழ் மாநில 
அனைத்து மாவட்ட  செயலர்கள் 
கவனத்திற்கு 

நேற்று நடைபெற்ற கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நிதி வசூல் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன் படி தமிழ்மாநில சங்கம் ரூ 50,000/-,  வேலூர் மாவட்டம் ரூ 50,000/- , STR சென்னை மாவட்டம் ரூ 40,000/-, கோயம்புத்தூர்  மாவட்டம்  ரூ 40,000/- , திருநெல்வேலி மாவட்டம் ரூ 30,000/-  கடலூர் மாவட்டம் ரூ 25,000/- , திருச்சி மாவட்டம் ரூ 10,000/- அளிப்பதாக தெரிவித்துள்ளன . மற்ற மாவட்ட செயலர்களும் அவசர அவசியம் கருதி தங்கள் மாவட்ட சங்கத்தால் எவ்வளவு ரூபாய் கொடுக்க இயலும் என்று ஓரிரு நாட்களுக்குள் தெரிவித்தால் மாநில சங்கம் உடனடியாக அந்த நிதியினை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணமாக அளிக்க இசைந்துள்ளது. அந்த ஒப்புக்கொண்டுள்ள நிதியை பின்னர் அந்தந்த மாவட்டங்கள் மாநில சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம்.,
தமிழ் மாநில செயலர் 
AIBSNLPWA 
கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மaக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம். 
அவர்தம்  துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை. 
தோழமையுள்ள 
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.